குடிமங்கலத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலை கொலை செய்த மணிகண்டன், இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலத்தை அடுத்த மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமாக அங்கு தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் வேலை செய்யும் மூர்த்திக்கும், அவரது மகன்களான தங்கபாண்டியன், மணிகண்டனுக்கும் இடையே நேற்று முன்தினம் (ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி) இரவு மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தந்தை மூர்த்தியை தங்கபாண்டியனும், மணிகண்டனும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் சென்றுள்ளார். பின்னர், அவர்களை சமாதானப்படுத்தி, காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சிஸில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அங்கு பதுங்கி இருந்த மூர்த்தியின் மகன் மணிகண்டன், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலுவை தாக்கியுள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சண்முகவேலுவை, அங்கிருந்த மூர்த்தி, தங்கபாண்டி, மணிகண்டன் மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, மூவரும் தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மூர்த்தி மற்றும் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான தங்கபாண்டியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இருவரையும் உடுமலைபேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர். பின்னர், அவர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில், சிக்கனூர் உப்பாறு ஓடை அருகே சென்றபோது, போலீசார் மீது மணிகண்டன் திடீரென தாக்குதல் நடத்தினார். இதில், உதவி ஆய்வாளர் சரவணகுமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தற்காப்புக்காக காவல்துறையினர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த என்கவுன்ட்டரில் மணிகண்டன் உயிரிழந்தான்.
இதுகுறித்து காயமடைந்த உதவி ஆய்வாளர் சரவணக்குமார் கூறுகையில், “மணிகண்டன் எங்களை தாக்கியதால், தற்காப்புக்காக அவரை சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்றார். இதனிடையே, என்கவுன்ட்டரில் உயிரிழந்த மணிகண்டனின் உடல், உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உயிரிழந்த சண்முகவேலுவின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூபாய் 1 கோடியை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இதுபோன்று காவல்துறையினரை கை வைக்கும் கயவர்களை உடனுக்குடன் களை எடுத்தால் மட்டுமே, நாட்டில் உள்ள குண்டர்கள் மற்றும் பணத்திற்காக கொலை செய்யும் குற்றவாளிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்பதை, கொலை குற்றவாளி மணிகண்டன் என்கவுண்டர் மூலம் தமிழக காவல்துறை உறுதி செய்துள்ளது. வாழ்க நம் காவலர்கள்! வளர்க நமது காவல்துறை!! வீரவணக்கம்! வீரவணக்கம்!! சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!