இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிகளை கட்டாயமாக வைத்துக் கொள்ள திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, ஐபிஎஸ்., உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு கட்டாயமாக வார விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி, ஐபிஎஸ்., உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி தன் கீழ் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் காவல்துறை அதிகாரிகளுடன் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.திருச்சி மாநகர பகுதிக்கு உட்பட்ட சில காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என புகார் வருகிறது. இனி வரும் காலங்களில் அது போன்ற புகார்கள் வருவதற்கு இடம் தராமல் வார விடுமுறை வழங்க வேண்டும்.
வார விடுமுறை தருவதில் என்ன பிரச்சனை உள்ளது? என்ன என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும். சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்க வேண்டும். காவல்துறை துணை ஆணையர்கள் (DC), வார விடுமுறை வழங்கப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும். உதவி ஆணையர்கள் (AC) இதனை உறுதி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்
திருச்சி மாநகர ஆணையர் காமினி அவர்களின் அறிக்கை மிகவும் வரவேற்புக்கு உரியது. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணிக்கு செல்லும் காவலர்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள ஆணையிட வேண்டும். இது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.
காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் கொடூர மரணம் போல் பல காவலர்கள் கொலையுண்டும், ரவுடிகளாலும் குண்டர்களாலும் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளார்கள். இது போன்ற கொடூர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உடனடியாக தமிழக அரசும், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு காவல்துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களுக்கும் மனைவி, குழந்தைகள், தாய், தகப்பன், உற்றார் உறவினர்கள் அனைவரும் இருக்கிறார்கள் அவர்களும் சக மனிதர்களே. இத்தனை உறவுகளையும் விட்டுவிட்டு தன் கடமையை கண்ணும் கருத்துமாகக் கருதி மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தன் உயிரை துச்சம் என நினைத்து இரவு ரோந்து பணிக்கு செல்கிறார்கள். மக்களின் பாதுகாப்புக்காக செல்லும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு முழுவதும் ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களுக்கு துப்பாக்கி பயன்படுத்தும் அதிகாரத்தை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக கொடுத்தாக வேண்டும். அப்பொழுதுதான் காவல்துறையினர் தன்னம்பிக்கையோடும், முழு பாதுகாப்போடும் பணிக்கு செல்ல இயலும். அவர்களின் பணி இன்னும் சிறப்பாக அமையும்.