காவல்துறை மக்களின் நண்பன் ! நிரூபித்த காவல் ஆய்வாளர் விஜயராகவன் !!?

by ஆசிரியர்
Reading Mode

காவல்துறை மக்களின் நண்பன் ! நிரூபித்த காவல் ஆய்வாளர் விஜயராகவன் !!?

சென்னை அம்பத்தூர் பி.எஸ்.என்.எல். டெலிபோன் எக்ஸ்சேஞ் அருகே உள்ள பாலத்தின் கீழ் சிலர் வீடுகள் இல்லாமல் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.

வறுமையின் கோரப் பிடியில் வீடில்லாமல் பாலத்தின் கீழ் வசிக்கும் இவர்கள் அம்பத்தூர் எஸ்டேட் தொழிற்சாலைகளில் வீணாக வெளியே போடப்படும் துண்டு துண்டு இரும்புகளைச் சேகரித்து அவற்றை கடைகளில் விற்று அதன் மூலம் வாழ்பவர்கள்.

இவர்களின் இத்தகைய கொடிய வறுமையில் இவர்களுடைய பிள்ளைகளை வளர்ப்பது என்பதே கடினாமான காரியமாக இருக்கும்போது அவர்களை பள்ளிக்கூடம் அனுப்புவது என்பது கற்பனை செய்துகூட பார்க்க முடியாததாக இருந்தது.

அவர்களுடைய பிள்ளைகளும் சாலைகளில் விளையாடிக்கொண்டும், அவர்களுடன் சேர்ந்து இரும்பு மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய வீணான பொருள்களை சேகரித்துக்கொண்டும் இருந்தார்கள்.

இங்கு தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் கடந்து போகிறார்கள். யாரும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை.ஆனால், காவல்துறை கரம் கொடுக்க முன்வந்தது.

சென்னை, அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தின் ஆய்வாளராக உள்ள விஜயராகவன், அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் ரோந்து செல்லும்போது அங்கே பி.எஸ்.என்.எல். எக்ஸ்சேஞ் அருகே உள்ள பாலத்தின் கீழ் வசிக்கும் பாதையோரவாசிகளின் பிள்ளைகள் சாலைகளில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்த, அவரின் காக்கி மனதுக்குள் இரக்கம் ஏற்பட்டுள்ளது.

படிக்க வேண்டிய வயதில் இப்படி எந்த ஆதரவும் இல்லாமல் கல்வியும், வழிகாட்டுதல்களும் இல்லாமல் இருந்தால் இந்த குழந்தைகள் வருங்காலத்தில் குற்றச் செயல்களை நோக்கியல்லவா செல்வார்கள். அந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்த இன்ஸ்பெக்டர் விஜயராகவன் அந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அந்த குழந்தைகளை அழைத்து விசாரித்தபோது அவர்களில் மூன்று பேர் வறுமையால் பள்ளிக்கூடத்தை விட்டு நின்றுவிட்டது தெரியவந்தது.

அதே போல பள்ளிக்கூடம் போகிற வயதில் அவர்களில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று விசாரித்து மொத்தம் 10 பேரை கண்டறிந்தார்.

இந்த குழந்தைகள்… பள்ளிக்கூடம் போக வேண்டுமானால்… அவர்களுக்கு சீருடை… பள்ளி புத்தக பை… பாடநூல் உபகரணங்கள்… எல்லாம் தேவை என்பதை அறிந்தார்.

அந்த சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரித்தால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போது பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களின் பண உதவியோடு 6 சிறுமிகள், 4 சிறுவர்கள் என மொத்தம் 10 மாணவர்களுக்கு சீருடை, காலணி, பேஸ்ட், பிரஷ், புத்தகப் பை, பாடநூல் உபகரணங்கள் என வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த சிறுவர்களை அருகே உள்ள பட்டரவாக்கம் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துள்ளார்.

ஏதோ பள்ளிக்கூடம் சேர்த்துவிட்டோம் என்று விட்டுவிடாமல் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்பதற்காக அந்த பிள்ளைகளை அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் தினமும் தங்கள் ரோந்து வாகனத்தில் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்று அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார்.

இதனால், பாதையோர வாசிகளின் பிள்ளைகள் தினமும் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்கள்.

”அந்த பிள்ளைகளை அவர்கள் தீய வழிகளில் செல்லாமல் தடுத்து பள்ளிக்கூடம் அனுப்புகிறோம் என்பது ஒரு சின்ன சந்தோஷம்” என்கிறார் அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன்.

காவல்துறை மக்களின் நண்பன் என்பார்கள். அதை வெறும் வார்த்தையாக அல்லாமல், நிஜமாக்கிக் காட்டியிருக்கிற அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன் அவர்களை நங்கூரம் மீடியா நெட்வொர்க் மற்றும் போலீஸ் விஷன் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00