ராஜஸ்தானில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் !18 பேர் கைது !! 4 சட்டவிரோத ஹோட்டல்கள் புல்டோசரால் இடிப்பு !!!?
ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீ கங்காநகரில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, பல நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 4 சட்டவிரோத ஹோட்டல்களை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் மூலம் இடித்துள்ளது.
போலீஸ் தகவலின்படி, கடந்த ஜூன் 18-ஆம் தேதி 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி தனது தோழியைச் சந்தித்து விட்டு வீடு திரும்புவதற்காக இ-ரிக்ஷாவில் சென்றுள்ளார்.
அப்போது, ரிக்ஷா ஓட்டுநர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், உள்ளூர் ஹோட்டல் உரிமையாளரிடம் ஒப்படைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிறுமியை பல்வேறு ஹோட்டல்களுக்கு மாற்றி வைத்து, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

விசாரணையில், சிறுமிக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருள் கொடுத்து மயக்க நிலையில் வைத்திருந்ததாகவும், சுமார் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பெற்றோரின் புகாரின் பேரில் தீவிர தேடுதல் நடத்திய போலீசார், ஜூன் 22ஆம் தேதி சிறுமியை ஒரு ஹோட்டலில் இருந்து மீட்டனர். இந்த வழக்கில் இ-ரிக்ஷா ஓட்டுநர், ஹோட்டல் மேலாளர்கள் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘ஹோட்டல் ஜாய் இன்’ உள்ளிட்ட 4 சட்டவிரோத ஹோட்டல்கள் மாவட்ட நிர்வாகத்தால் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு பாதுகாப்பில் மருத்துவச் சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தரப்பினரிடமும் வலுத்து வருகிறது.