லஞ்சப் புகார் எதிரொலியால்
தச்சநல்லூர் உதவி காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவரின் ஆட்டோ சமீபத்தில் திருட்டு போனது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் காவலர் வழக்கு பதிவு செய்து திருடப்பட்ட ஆட்டோவை கண்டுபிடித்து மீட்டனர் ஆட்டோவை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமாறு அதன் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உரிமையாளர் காவல் நிலையத்திற்கு சென்ற போது அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மணிகண்டன் (வயது 54) ஆட்டோவை விடுவிப்பதற்கு ரூ. 5000 லஞ்சமாக தருமாறு கேட்டு உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத உரிமையாளர் அந்த உரையாடலை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அந்த ஆடியோ ஆதாரத்துடன் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமணியிடம் அவர் நேரில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஆணையர் இதைக் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு மேற்கு மண்டல துணை ஆணையர் பிரசன்ன குமாருக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் உதவி ஆய்வாளர் ரமேஷ் மணிகண்டன் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் ரமேஷ் மணிகண்டனை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டார்.
சேரன்மகாதேவியை பூர்வீகமாகக் கொண்ட ரமேஷ் மணிகண்டன் ஏற்கனவே சந்திப்பு காவல் நிலையத்தில் பணியாற்றிய போது எழுந்த புகார்கள் காரணமாக தச்சநல்லூருக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.