குடிமங்கலம் அருகே எல்.எல்.ஏ தோட்டத்தில் வைத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்துப் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும் அவரது மகன் தங்கபாண்டியனும் தங்கி பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் நேற்று இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (வயது 57), அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தவலறிந்து அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை தடுத்து நிறுத்தி, மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அப்போது போலீசாரை பார்த்ததும் மூர்த்தியின் இளைய மகன் மணிகண்டன் தோட்டத்தில் பதுங்கி உள்ளார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மூர்த்தியை சிகிசைக்காக அனுப்ப ஏற்பாடு செய்த நிலையில், தந்தை மூர்த்தியையும், மகன் தங்கபாண்டியையும் புகைப்படங்கள் எடுத்து வண்டியில் ஏற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது தோட்டத்தில் பதுங்கியிருந்த இளைய மகன் மணிகண்டன், திடீரென்று அரிவாளை எடுத்துக்கொண்டு காவல் துறையினரை துரத்தியுள்ளான்.
உடனே அங்கிருந்த மூர்த்தியும், தங்கபாண்டியும் சேர்ந்து அரிவாளுடன் சென்று சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் உடன் சென்ற காவல்துறையினரையும் தாக்கியுள்ளனர்.
இதில் சண்முகவேலுவின் தலை, கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற ஓட்டுநரையும் துரத்திச் சென்றுள்ளனர். ஆனால் அவர் தப்பிச்சென்று காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் மூர்த்தி மற்றும் அவரது மகன்களான தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் தப்பிச்சென்று விட்டனர்.
தற்போது மூர்த்தி மற்றும் மணிகண்டனை தேடி கண்டுபிடித்திருக்கும் குடிமங்கலம் காவல்துறையினர், தப்பிச் சென்ற தங்கபாண்டியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு சென்ற மேற்கு மண்டல டி.ஐ.ஜி சசிமோகன், எஸ்.பி யாதவ் கிரிஷ் அசோக் உள்ளிட்டோர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை – மகன் சண்டையை தடுக்க சென்ற உதவி ஆயவாளர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோல், பாதுகாப்பிற்கு செல்லும் காவல்துறையினரை, குற்றவாளிகள் சர்வ சாதாரணமாக கொடூர ஆயுதங்களை வைத்து தாக்குவது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்த சம்பவங்களை உற்று நோக்கி பார்க்கும் போது மக்களை பாதுகாக்கும் காவல்துறையினருக்கு அவர்களுக்கு உண்டான அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் கொடுக்காமல் இருப்பதே இது போன்ற கொலைக்கு காரணமாக உள்ளது. எனவே இந்த கொடூர கொலை சம்பவங்களை கருத்தில் கொண்டு காவல்துறைக்கு அவர்களுக்கான பாதுகாப்பு அரணை உறுதி செய்ய உடனடியாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.