அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் மூன்று சேனல்கள் நீக்கம் ! சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் !!?
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24×7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.
இந்தச் சேனல்கள் திடீரென அரசு கேபிள் தளத்தில் இருந்து காணாமல் போனதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டபோது, முதலில் தொழில்நுட்பக் கோளாறு காரணம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், செட்-டாப் பாக்ஸ் நிர்வாகத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் தொடர்பான பிரச்சினையால் ஒளிபரப்பு தடைபட்டுள்ளதாகவும், விரைவில் சீரமைக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் நான்கு நாட்கள் கடந்த பின்னரும் இந்த மூன்று செய்தித் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு மீண்டும் தொடங்கப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே காரணம் என்றால், ஏன் குறிப்பிட்ட இந்த மூன்று செய்தி சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன என்பது புரியவில்லை.
அதேபோல், ஒரு தனியார் நிறுவனம் அரசு கேபிளில் ஒளிபரப்பாகும் சேனல்களை தன்னிச்சையாக கட்டுப்படுத்தும் நிலை இருந்தால், அரசு கேபிள் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரம் மற்றும் பொறுப்புணர்வு குறித்தும் கேள்விகள் எழுகின்றன.
இந்த விவகாரத்தில் தொழில்நுட்பச் சிக்கலாக இருந்தாலும், நிர்வாகப் பிரச்சினையாக இருந்தாலும் அல்லது தனியார் நிறுவனத்துடன் தொடர்புடைய சிக்கலாக இருந்தாலும், அதனை உடனடியாக சரிசெய்து சேவையை மீட்டெடுப்பது தமிழ்நாடு அரசு மற்றும் அரசு கேபிள் நிறுவனத்தின் பொறுப்பாகும்.
எனவே, பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24×7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தில் உடனடியாக மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.