திருப்பூர் மாவட்டம்,வேலம்பாளையம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட திருமுருகண்பூண்டி ரிங் ரோடு பகுதியில் இரவு 11.30 மணியளவில் காவல்துறையினர் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவில் பெண் கதறி அழும் சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில்,ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்ற இளம்பெண் பிரசவ வலியால் தாங்க முடியாமல் துடித்ததும்,அவரது கணவர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் தெரியவந்தது.

மேலும்,பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் அவர் வலி தாங்க முடியாமல் கதறி அழுது துடித்துள்ளார். அப்போது,பணியில் இருந்த பெண் காவலர் கோகிலா கர்ப்பிணி பாரதிக்கு ஆட்டோவில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளார். காவல் பணியில் சேர்வதற்கு முன் நர்சிங் படித்து மருத்துவமனையில் பணியாற்றிய கோகிலா அந்த அனுபவத்தை வைத்து பாரதிக்கு பிரசவம் பார்த்தார். இதில் வடமாநில பெண் பாரதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.இதையடுத்து பாரதி மற்றும் குழந்தையை திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள்7 தெரிவித்தனர்.
வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாய்,சேயின் உயிரை காப்பாற்றிய பெண் காவலர் கோகிலாவுக்கு திருப்பூர் மாநகர காவல்துறை கமிஷனர்,காவல் உயர் அதிகாரிகள், காவலர்கள், மற்றும் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தாயுள்ளமும், கருணை மனமும் கொண்ட பெண் காவலர் கோகிலா அவர்களை நாமும் தலை வணங்கி நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவிப்போம்.
வாழ்க நம் காவலர் கோகிலா! வளர்க நம் காவல்துறை!!!