மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் தகுதித் தேர்வு உதவித்தொகை (NMMS) திட்டம், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள திறமையான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 12,000/- உதவித்தொகையை வழங்குகிறது.இந்த அரிய வாய்ப்பை தமிழக மாணவர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
NMMS தேர்வு, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படும் ஒரு முக்கியமான திட்டமாகும். இதன் நோக்கம், 8 ஆம் வகுப்பு படித்து வரும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள திறமையான மாணவர்கள், பத்தாம் வகுப்பு வரையிலும் தங்கள் படிப்பைத் தொடர்வதை ஊக்குவிப்பதாகும். இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில், மாதத்திற்கு ₹1,000 வீதம், வருடத்திற்கு ₹12,000 உதவித்தொகை வழங்கப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு மொத்தம் ₹48,000 உதவித்தொகை பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதுவும் இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கே இந்த திட்டம் பொருந்தும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் 3.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 7 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் சாதி (SC) மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 5% மதிப்பெண் தளர்வு உண்டு (அதாவது 50% மதிப்பெண்கள் போதும்).
தேர்வு முறை
NMMS தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது: மனத்திறன் தேர்வு (Mental Ability Test – MAT) மற்றும் கல்வித்திறன் தேர்வு (Scholastic Aptitude Test – SAT). MAT தேர்வில், பகுத்தறியும் திறன், எண் தொடர்கள், படத் தொடர்கள் போன்ற கேள்விகள் இடம்பெறும். SAT தேர்வில், 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், மற்றும் கணிதப் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்ப செயல்முறை மற்றும் தேர்வு தேதி குறித்த அறிவிப்புகள் பொதுவாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வெளியாகும். தமிழக பள்ளிக் கல்வித்துறை மூலம் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியர்களைத் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்று, இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம்.
https://scholarships.gov.in/ApplicationForm/login மற்றும் அந்தந்த மாநில அதிகாரப் பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த அரிய வாய்ப்பை மாணவ மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டுகிறோம்.