ஜோசப் விஜய் எனும் நான் நாளை முதல் அமைச்சராக பதவி ஏற்கிறேன்!!
முதல்வராக பதவியேற்கிறார் விஜய்.
தமிழக அரசியலில் பல நாட்களாக நீடித்து வந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிக்கட்சியாக அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டாததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடியது.
விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகி, கட்சியின் பலம் 107 ஆக குறையும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக பெற்றது.
காங்கிரஸ் 5 எம்எல்ஏக்கள், சிபிஐ மற்றும் சிபிஎம் தலா 2 எம்எல்ஏக்கள், விசிக மற்றும் ஐயுஎம்எல் தலா 2 எம்எல்ஏக்கள் ஆதரவு வழங்கியதால், தவெக அணியின் பலம் 120 ஆக உயர்ந்தது.
பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் ஆதரவு கடிதங்களுடன் விஜய் இன்று (09/05/2026) மாலை தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன், எம்பி சு.வெங்கடேசன் மற்றும் விசிக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
விஜய்க்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாளை காலை 10;00 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
முன்னதாக கூட்டணி ஆட்சி அமைப்பதாக விஜய் அளித்திருந்த கடிதத்தில் போதிய பெரும்பான்மை இல்லாததை ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்ததாகவும், தேவையான எம்எல்ஏ ஆதரவை திரட்டிய பிறகே அழைப்பு வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் மூலம் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.
முதலமைச்சராக பதவியேற்கும் ஜோசப் விஜய் அவர்களுக்கு நங்கூரம் மீடியா நெட்வொர்க் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.