இந்த மாதம்தான்
கடைசியாம்.
அறிவியல் வளர்ச்சி
யாரை விட்டது?
தெருவோரங்களில்
அனாதையாய் கிடந்த
அஞ்சல் பெட்டிகள்
அகற்றப்படுகிறது…
மறக்க முடியுமா
இந்த அஞ்சல் பெட்டியை?
குடும்ப விசயங்களை
குறுக்கும் நெடுக்குமாய்
இடைவெளி இல்லாமல்
எழுதி எழுதி போட்டது
இந்த பெட்டியில்தானே..
பிள்ளையார் சுழி போட்டு
அன்புள்ள மாமா
அன்புள்ள பெரியப்பா
எழுதிய கடிதங்கள்!
எத்தனை எத்தனை?
அக்கம் பக்க
விசாரிப்புகள்
ஊர் நடப்புகள்
எல்லாமே எழுதினோம்.
ஒன்றுகூடி படித்தார்கள்.
உயிருள்ள கடிதங்களில்
உணர்வுகள் பேசியது…
அஞ்சல் தலை ஒட்டாத
பொங்கல் வாழ்த்துகளுக்கு
அபராதம் கட்டி வாங்கிய
சந்தோச நினைவுகள்..
செல்போனில் வாழும்
இளைய தலைமுறைக்கு
அஞ்சல் பெட்டிகளில்
அனுபவம் இல்லை.
செல்ல சிணுங்களோடு
சென்சார் செய்திகளே
செல்போனில் வரும்போது
இந்த சிவப்பு பெட்டிக்கு
இனி என்ன வேலை?
அறிவியல் வளர்த்தோம்
உறவுகள் தொலைத்தோம்
அஞ்சல் பெட்டிகள் பாவம்
வேறென்ன செய்யும்?