முன்னோர்களின் ஆசியை அள்ளித்தரும் அற்புத அமாவாசை வழிபாடு !!
அமாவாசை என்பது மாதுர்காரனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும்.
சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள்.
சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள்.

இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள். அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து நமக்கு அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.
அதனால் தான் அமாவாசையன்று காகம், ஈ, எறும்பு, நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சம்பிரதாயத்தை வகுத்துள்ளனர்.
நம் வீட்டில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் முதலில் அறிவது(தெரிவது) இவர்களுக்குத் தான்.
நம் வீட்டிற்க்கு உறவினர் வரப் போகிறார்கள் என்றால் நம் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காகம் கத்தும்.

மற்றோரு உறவினர் ஒரு கெட்ட செய்தியை சொல்ல வருகிறார் என்றால் வேறு இடத்தில் இருந்து காகம் கரையும். இதை நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும் நல்ல விஷயத்தை ஒரு இடத்திலும், கெட்ட செய்தியை வேறு இடத்திலும் இருந்து காக வடிவில் நமக்கு தெரிவிப்பது நமது முன்னோர்களே!
நமது வீட்டில் ஒரு ஜீவன் பிரிய போகிறது என்றால் நம் வீட்டில் உள்ள மாடு, நாய்களுக்கு தான் முதலில் தெரியும்.

இந்த உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிமை உள்ளவையே.
அதுவே உங்கள் தாத்தா, பாட்டி, முன்னோர்கள் என்றால் அவர்களை நீங்கள் முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் செய்வார்கள்.
உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து நம்பப்பட்டு வரும் ஐதீகம்.
நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து கொள்ள இயலாது. மேலும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிட இயலாது. இதனால் தான் அவர்களுக்கு ஹோமம்
வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே பித்ரு ஹோமம் எனப்படுகிறது.
சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குவது போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுத கலசமாக தோன்றும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப் படுகிறது.
அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக் கரைகளிலும்,
கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வழியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது.
இதனாலேயே அமாவாசையில் கொடுக்கப் படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது.
பொதுவாக வலது ஆள் காட்டி
விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப் படுகின்றன.
இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது.
சாதாரணதாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷண சக்தியின் தெய்வீகக் தன்மையாகும். தை அமாவாசையன்று இச் சக்தியானது மிகவும் அபரிதமானதாக பெருகுகின்றது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப் படுகிறது.
பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே, இதன் நிழலில் தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.
ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக்கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
ஆகவே அமாவாசையின் சிறப்பு தெரிந்து நமது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து,முன்னோர்களின் ஆசி பெறுவோமாக.