ஆவிணிப்பட்டியில் அற்புதம்! சொக்கலிங்கம் மீனாட்சி திருக்கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!!
மீளாத் துயர் கொள்ளும் பக்தர்களை மீட்டெடுத்து,நாடி வரும் நன் மக்களுக்கு நன்மைகள் பல புரிந்து ஆவினிப்பட்டியில் அருளாட்சி செய்து வரும், அருள்மிகு மீனாட்சி சொக்கலிங்கம் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, ஆவிணிப்பட்டி கிராமத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு சொக்கலிங்கம் உடனுறை மீனாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயச் சிறப்பு
வளம் பொங்கும் பாண்டிய நாட்டில், ஆயிரக்கணக்கான ஆலயங்களில் சிவபெருமான் அருள்புரியும் திருத்தலங்கள் பல உள்ளன. அதில் ஆதி காலத்தில் இருந்தே ஆமுனி ஈஸ்வரர் திருப்பெயரால் வழங்கி வரும் ஆமுனி மாநகர் என அழைக்கப்படும் ஆவினிப்பட்டியில் பார் போற்றும், பண்பாட்டுச் சிறப்புமிக்க நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரால் அருள்மிகு சொக்கலிங்கம் மீனாட்சி அன்னைக்கு தற்போது புதிதாக எழில் பொங்கும் அழகுடன், பெரும் பொருட்செலவுடன் தெய்வீகத் தன்மை பொருந்திய திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம்
சுப ஸ்ரீ மங்களகரமான விசுவாவசு வருஷம், மாசி மாதம் 24ஆம் நாள் (08/03/2026) ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதியும், சுவாதி நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் ரிஷப லக்னத்தில் காலை 11:00 மணிக்கு அருள்மிகு சொக்கலிங்கம் மீனாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் , வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கல இசையுடன் சிவ வாத்தியங்கள் முழங்க, வானத்தில் வெடிகள் அதிர, கருடன் அருட்பார்வையால் உலா வர, வான தேவர்கள் மலர் தூவ, திரண்டு இருந்த பக்தர்கள் சிவ கோஷம் முழங்க மிகச் சிறப்பான முறையில் மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

நகரத்தார்களின் பெருமை, பொதுமக்களின் மகிழ்ச்சியே
திருக்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களை வாருங்கள்! வாருங்கள்!! என்று அழைத்து நாவிற்கு சுவை மிக்க உணவளித்து உபசரித்தது போற்றுதலுக்குரியது. மனதிற்கு சிவ சக்தியின் அருளோடும், வயிற்றிற்கு சுவைமிக்க உணவோடும் மகிழ்ச்சி பொங்க உபசரித்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களை வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க பாராட்டியுள்ளது, நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்திற்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

சிறப்பு அழைப்பாளர்கள்
இத்திருக்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு குன்றக்குடி ஆதீனம், மற்றும் S.ரகுபதி அவர்கள் (அமைச்சர்- கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை) K.R.பெரிய கருப்பன் அவர்கள் (அமைச்சர்- கூட்டுறவுத்துறை) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காவல்துறை மற்றும் அந்தணர்களுக்கு பாராட்டு
கும்பாபிஷேகத்தை காண வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல், போக்குவரத்தையும், கூட்ட நெரிசலையும் மிகச் சரியான முறையில் கண்காணித்து தன் கடமையை செவ்வனே செய்த காவல் துறையினருக்கும், கும்பாபிஷேக பூஜை முறைகளை ஆகம விதிப்படி அற்புதமாக செய்து கொடுத்த அந்தணர்கள் அனைவருக்கும், மற்றும் இறைப்பணி செய்து கொடுத்த பக்தர்களுக்கும் கருப்பையா விக்னேஷ் செட்டியார் என்ற ராஜவர்மன் ஷாலினி ஆகியோர் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.