தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்! –
சங்கர் ஜிவால் பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த வெங்கட்ராமன்?
மே 8, 1968ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்தவர் ஜி. வெங்கட்ராமன். இவர் இளங்கலை பொருளாதாரம், முதுகலை பொது நிர்வாகம் படித்துள்ளார். 1994-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பயிற்சி முடிந்து, 1996ஆம் ஆண்டு திருச்செந்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) தனது பணியை தொடங்கினார். 1997-இல் கோவில்பட்டி, ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.2001இல் சென்னை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.
இவர் சட்டம் ஒழுங்கு சவால்களை சமாளிப்பதில் திறமைசாலி என பெயர் பெற்றவர். திருச்செந்தூரில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, பெரம்பலூர் ஆண்டிமடம் கோயில் கலவரத்தை சுமூகமாக சமாளித்தது, விஜிலன்ஸ் ஐஜியாக இருந்த போது, சிறப்பாக ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, காவல்துறையை நவீனமயமாக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தியவர். 30 ஆண்டுகளுக்கும் மேலான காவல் பணி அனுபவம் பெற்றவர்.
திருச்செந்தூர், ராமநாதபுரம், மதுரை, பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏஎஸ்பி, எஸ்பி ஆக பணியாற்றினார். பின்னர் சிபிஐ, சிபிசிஐடி, விஜிலன்ஸ், சைபர் கிரைம், காவல் தலைமையகம் உள்ளிட்ட பிரிவுகளில் டிஐஜி, ஐஜி,ஏடிஜிபி, டிஜிபி பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

தற்போது அவர் தமிழக காவல்துறையின் நிர்வாக பிரிவு டிஜிபியாக இருக்கும் நிலையில் கூடுதலாக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இன்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் முறைப்படி முன்னாள் காவல்துறை தலைவர் (சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி) சங்கர் ஜிவால், புதிதாக பொறுப்பேற்ற வெங்கடராமனுக்கு கோப்புகளை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்டு வெங்கடராமன் கோப்புகளில் கையெழுத்திட்டு காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து முன்னாள் காவல்துறை இயக்குனாராக இருந்து ஓய்வுபெற்ற சங்கர் ஜிவாலுக்கு பாரம்பரிய முறைப்படி அவரின் காரை காவலர்கள் கயிறுகட்டி வடம் பிடித்து சிறிது தூரம் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த பாரம்பரிய முறையை சங்கர் ஜிவால் வேண்டாம் என தவிர்த்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
அதேபோல், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக (Chairman & Managing Director) வினித் தேவ் வான்கெடே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்தப் பொறுப்பில் இருந்த ஷைலேஷ் குமார் யாதவ் இன்று ஓய்வு பெற்றதால், இவரை உள்துறை அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) தீராஜ் குமார் தெரிவித்துள்ளார்.