பூ பூக்காமலேயே காய்க்கும் மரம் வில்வ மரம், என்பார்கள்.
என்றாலும் வில்வ மரத்திலும் பூ பூப்பது உண்டு.வில்வம் வைகாசி மாதத்தில்
(மே – ஜூன் காலகட்டத்தில்) பூக்கும் தன்மை உடையது.இதன் பூக்கள் வெண்ணிறம் உடையவை, மணம் மிக்கவை.
வில்வப் பூக்கள், 2.5 செ.மீ. குறுக்களவில், சிறிய கொத்துகளாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில், இனிய மணத்துடன் காணப்படும். பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை
வில்வப் பூவின் மருத்துவ குணங்கள்!
வில்வப் பூவின் இதழை வதக்கி இளம் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் கொடுத்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான கண்வலி,கண் அரிப்பு,சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் அகலும்.வில்வ பூ வாய் நாற்றத்தைப் போக்கும்.விஷத்தை முறிக்கும்.
வில்வ மலர், கடுகுரோகிணி, சுக்கு,வசம்பு, கண்டங்கத்தரி வேர், ஆடாதோடா இலை ஆகியவற்றை வகைக்கு முப்பது கிராம் எடுத்து நன்றாக இடித்து அரைலிட்டர் நீரூற்றி ஒரு பாத்திரத்திலிட்டு நீர் பாதியாக சுண்டும் வரை கொதிக்க விடவும்.வடிகட்டி காலையிலும் மாலையிலும் அருந்த காய்ச்சல், உடல்வலி குணமாகும்.
வில்வ பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தீநீர் காக்காய் வலிப்புக்கு மருந்தாகிறது.வில்வ மலரையும், துளசியிலையையும் சம அளவு எடுத்து சாறெடுத்து அத்துடன் சிறிது தேனை சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி அருந்தினால் மலேரியா காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சலும் மட்டுப்படும்.
வில்வ மலரையும் வேப்பம்பூவையும் கைப்பிடியளவு எடுத்து நெய்யில் வதக்கி அம்மியில் தேன்விட்டு அரைத்து கொட்டைப்பாக்களவிற்கு ஒரு வேளைக்கு ஒரு உருண்டையாக சாப்பிட மூன்று நாட்களில் உள்காய்ச்சல் குணமாகும்.வில்வ மலரை உலர்த்திப் பொடித்து, நாள்தோறும் சிறிதளவு சாப்பிட பசிமந்தம் நீங்கும்.
வில்வப்பூவின் வேறு பலன்கள்!!
வடை மாவில் வில்வப்பூவை நறுக்கிப் போட்டு கலந்து வடை செய்து சாப்பிடலாம். இதனால் குடல் வாயு குணமாகும்.வில்வப் பூ கஷாயம் பசிமந்தத்தைக் கண்டிக்கும்.வில்வப் பூ- மந்தத்தைக் குணப்படுத்தும்.வில்வ பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி அருந்தினால் மாந்தம் நீங்கும்.