பஞ்சமா பாதகங்களை போக்கும் பழனி பஞ்சாமிர்தமும் ! அதில் மறைந்துள்ள வியப்பூட்டும் விஞ்ஞானமும் !!?
தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே பிரசித்தி பெற்ற பிரசாதம் என்று இருக்கிறது. திருப்பதியில் லட்டு உலகப் புகழ் பெற்ற பிரசாதமாக இருப்பதைப் போல பழனியில் பஞ்சாமிர்தம். உண்மையில் வெறும் சுவைக்காக மட்டுமோ அல்லது பக்தர்களை ஈர்ப்பதற்காகவோ இப்படி ஆலயங்களில் பிரசாதத்தை தரும் வழக்கம் வரவில்லை. கூட்டம் அதிகமாக காணப்படும் ஆலயங்களில் எளிதில் தொற்றக்கூடிய நோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இந்த பிரசாதங்களுக்கு உண்டு.

உதாரணத்திற்கு பழனி பஞ்சாமிர்தத்தை தினமும் காலையிலும் மாலையிலும் சிறிதளவு உட்கொண்டால் போதும். உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும்.
இதனை வெறும் பூஜைப் பொருளாக மட்டுமே பார்க்கக் கூடாது. சித்தர் போகர் அருளியது பழனி பஞ்சாமிர்தம். மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவைகளில் இருந்து மிக எளிமையாக சமாளிக்கும் முறையை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். பழனியில் நவபாஷான சிலையை நிறுவிய போகர் ஒரு மிகச்சிறந்த அருமருந்தினை நமக்கு அளித்துள்ளார்.

மலை வாழை, சுத்தமான நெய், நல்ல தேன் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சாமிர்தம் தான் பழனி பஞ்சாமிர்தம். இந்த பஞ்சாமிர்தத்தை தினமும் காலையிலும் மாலையிலும் சிறிதளவு பஞ்சாமிர்தம் எடுத்துக் கொண்டால் போதும், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுக்களை சமாளிக்கும் அளவு உடல் ஆரோக்கியப்படும். உடல் சூட்டினைக் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் நம் பாரம்பரிய பஞ்சாமிர்தத்திற்கு உண்டு.

பழனி பஞ்சாமிர்தம்
‘பஞ்சாமிர்தம்’ என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது ‘பழனியின் பஞ்சாமிர்தம்’தான். ‘பஞ்சாமிர்தம்’ என்ற சொல்லுக்கு ‘ஐயமுதம்’ என்று பெயர். அமுதம் என்பது நீண்ட ஆயுளை வழங்கும் தன்மை வாய்ந்தது. அத்தகு ஐந்து வகை அமுதங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதே பஞ்சாமிர்தமாகும்.இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பகுதியிலிருந்து கிடைப்பதாகும். வாழைப்பழமும் நாட்டுச்சர்க்கரையும் மற்றும் கற்கண்டாகிய மூன்றும் – வயலும் வயல் சார்ந்த பகுதியுமாகிய மருதநிலத்திலும், தேன் – மலையும் மலைசார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சி நிலத்திலும், நெய் – காடும் காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லை நிலத்திலும் கிடைப்பவையாகும்.
இவற்றை விகிதாச்சார முறையில் சேர்ப்பதால் உண்டாவதே பஞ்சாமிர்தமாகும்.இந்தப் பஞ்சாமிர்த அபிஷேகமானது எல்லாக் கோயில்களிலும் நடைபெற்றாலும் பழனியில் கிடைக்கும் பஞ்சாமிர்தத்திற்கு மட்டும் புகழ் அதிகம். அதற்குக் காரணம், பஞ்சாமிர்தத்தில் பயன்படுத்தப்படும் ‘விருப்பாச்சி’ என்ற வகை மலைப்பழம் என்றாலும், மலையின்மீது பழமாக இருக்கும் முருகனின் (நவபாஷாண சிலை) மீது பட்டு வருவதாலாகும்.
பஞ்சாமிர்த அபிஷேகப் பலன்
மலைப்பழம், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு, நெய், தேன் உள்ளிட்டவற்றை முறைப்படிக் கலந்து முறையான மந்திரம் சொல்லி, முருகனுக்கு அபிஷேகம் செய்தால், பஞ்சமா பாதங்களாகிய ஐந்து வகைக் குற்றங்களும் நம்மைவிட்டு நீங்கி வேண்டியவற்றை அந்த வேலாயுதம் வழங்குவார்.
நாட்டுச் சர்க்கரை, நறுந்தேன், பசும்பால், பழங்கள், நெய் ஆகியவற்றோடு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யும்போது, கையில் தண்டு கொண்டு அருளும் தண்டாயுதன் அதை ஏற்றுக்கொண்டு அருள்கிறான். இதனை,
“சர்க்கரா மது கோஷீர பலசார க்ருதைர்யுதம்,
பஞ்சாமிர்தம் ஸ்நாநமிதம் பாகுலேய க்ரஹாணபோ”
என்கிறது ஸ்ரீ சுப்ரமண்ய கல்பபூஜா
விதாநம்.பஞ்சாமிர்த விதி;
பஞ்சகவ்யத்திற்கு (பசுவிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணத்தை விகிதாச்சார முறையில் கலப்பதற்கு முன்னால், கிழக்குப் பகுதியில் தலைவாழை இலைபோட்டு, அதில் பச்சரிசி இட்டு, பாகம் பகிர்ந்து பிரித்து, பாத்திரங்கள் வைத்து மந்திரம் சொல்லி, நடுவில் பால், கிழக்கில் தயிர், தெற்கில் நெய், வடக்கில் தேன், மேற்கில் சர்க்கரை, அக்னி (தென்கிழக்கு) யில் வாழைப்பழம், பலாப்பழம் மற்றும் மாம்பழம் ஆகிய பழங்கள், ஈசான (வடகிழக்கு)த்தில் சந்தன நீரும், நிருதி (தென்மேற்கு)யில் பழரசங்களும், வாயு (வடமேற்கு)வில் நெய் ஆகியவற்றை வைத்து முறைப்படி பூசை செய்து தயாரிக்கப்படுவது என்று குமாரதந்திரம் சொல்கிறது.
தற்போதைய தயாரிப்பு முறை;
மலைப்பழம், நாட்டுச்சர்க்கரை, கற்கண்டு, தேன், நெய் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை இயந்திரங்களின் உதவியுடன் விகிதாச்சார முறையில் கலந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு முறைப்படி தயாரித்த பஞ்சாமிர்தத்தைத் தரம் சோதித்த பிறகு முருகனுக்குத் தினந்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்படி அபிஷேகம் செய்த அபிஷேக பஞ்சாமிர்தத்தைக் கலந்தே தேவஸ்தான பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது.