தூத்துக்குடி மாநகராட்சியில் தெருவிளக்குகள் எரியாத அவலம்: திருட்டு, வழிப்பறி பயத்தில் பொதுமக்கள் அவதி!!?
தூத்துக்குடி மாநகராட்சியின் பெரும்பாலான தெருக்களில் மின்விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடப்பதால் சங்கிலிப் பறிப்பு, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் அரங்கேறும் சூழல் நிலவி வருவதாகப் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாகத் தெருவிளக்குகள் எரியாமல் முற்றிலும் முடங்கியுள்ளன.
மாலை 6 மணி முதலே ஒட்டுமொத்தத் தெருக்களும் கும்மிருட்டில் மூழ்கிவிடுவதால், வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே சாலைகளில் நடமாடக் கூட முடியாத பாதுகாப்பு அற்ற நிலை நீடித்து வருகிறது.
தெருக்களில் விளக்குகள் எரியாமல் இருட்டாக இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மர்ம நபர்கள் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் இருண்ட தெருக்கள் வழியாகச் சென்று வர நேரிடும் போது, ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது தெருநாய்களின் தாக்குதலுக்கு உள்ளிட்ட விபத்துகளோ ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பழுதடைந்துள்ள பழைய எல்இடி தெருவிளக்குகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக அகற்றிவிட்டுப் புதிய விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.