மூதாட்டியின் மாடு வளர்க்கும் ஆசையால் வந்த விபரீதம். மரணத்தில் முடிந்தது. மாடு வியாபாரியின் துர் புத்தியால் இந்த மனிதாபமற்ற அகோர சம்பவம் நடந்தேறி உள்ளது.
மாடு வாங்கி தருவதாகக் கூறி மூதாட்டியை அழைத்துச் சென்று, அவரை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் தூக்கிய வீசிய வியாபாரியை சங்ககிரி காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (வயது 70) இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கால்நடைகளை வாங்கி விற்கும் வியாபாரி ஏழுமலையிடம், மாடு ஒன்று வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து, ஜூலை 23ஆம் தேதி காலை கொங்கணாபுரத்தில் மாடு வாங்கித் தருவதாக கூறி மூதாட்டி சின்னப்பொண்ணுவை ஏழுமலை அழைத்துச் சென்ற நிலையில்,மாலை ஏழுமலை மட்டும் வீடு திரும்பியுள்ளார். மூதாட்டி சின்ன பொண்ணு வீடு திரும்பி வரவில்லை.
சின்னபொண்ணு வீடு திரும்பி வராததால் மூதாட்டியின் மகன் மதியழகன் எங்கே என் அம்மா என்று கேட்டபோது,அவரை மகுடஞ்சாவடியில் உள்ள உன் சகோதரி வீட்டுக்கு பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டதாக ஏழுமலை கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மதியழகன், தனது சகோதரி வீட்டுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது,அங்கு சின்னபொண்ணு வராதது தெரிய வந்தது.பின்னர்,பல இடங்களில் அவரை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மதியழகன்,சங்ககிரி காவல் நிலையத்தில் சின்னபொண்ணுவை காணவில்லை என புகார் மனு அளித்தார்.
இதற்கிடையே, ஏழுமலையின் கைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், கால்நடை வியாபாரி ஏழுமலையின் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர்,அவரைப் பிடித்து விசாரிக்கையில், தாரமங்கலம் அருகே பவளத்தானுார் ஏரியில் சின்னபொண்ணுவை கொலை செய்து, சாக்குப் பையில் மூட்டை கட்டி தூக்கி வீசியதாக தெரிவித்தார்.
பின்னர்,அவர் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில், சின்னபொண்ணுவின் தலை தனியாகவும், உடல் தனியாகவும் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ஏழுமலையை கைது செய்துள்ளனர்.
இந்த அகோர கொலை சம்பவம் எதற்காக செய்யப்பட்டது என்ற புலன் விசாரணையை காவல்துறை துவக்கி உள்ளனர்.