தமிழக அரசின் ஆணையின்பேரில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல்துறையினர் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக “DRUG FREE TAMILNADU” என்ற தலைப்பில் போதைப்பொருட்கள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக உருவாக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மயில்வாகனன், ஐபிஎஸ் தலைமையில், தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில், மாவட்ட காவல்துறையின் சார்பாக பொதுமக்களுக்கு போதைப்பொருட்கள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் காலை 05:30 மணியளவில் “DRUG FREE TAMILNADU” என்ற தலைப்பில், உறுதிமொழி ஏற்கப்பட்டு, காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து நேதாஜி உள் விளையாட்டு மைதானம் வரை மாபொரும் மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.

இந்த மாரத்தான் போட்டியில் 15 வயதிற்கு மேற்ப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், காவல் துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் போட்டியில் கலந்துக்கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேதாஜி உள் விளையாட்டு மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், ஐபிஎஸ் அவர்களால் பரிசுத் தொகையும் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தனுஷ் குமார், ஐபிஎஸ் மற்றும் லயன்ஸ் கிளப் செயலாளர் மற்றும் வேலூர் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதை வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துள்ளார்கள்.