கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மணலை கொள்ளையடித்து மோகனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, ஐபிஎஸ் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு நாமக்கல்-திருச்சி சாலையில் வளையபட்டி பகுதியில் அதிரடி வாகன சோதனை நடத்தினார். அதில் பிடிப்பட்டவர்களுக்கு உதவிய விவகாரத்தில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர், போலீஸ் ஏட்டு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கரூர், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இங்கு அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுகிறது. மணல் திருடர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் மணலை கொள்ளையடித்து மோகனூர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, ஐபிஎஸ் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினருக்கு உத்தரவிட்டத்தின்படி போலீசார் நாமக்கல்-திருச்சி சாலையில் வளையப்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.
அப்போது கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் இருந்து லாரியில் மணல் கடத்தி வந்ததும், அதற்கு ஒரு கார் பாதுகாப்பாக வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லாரியை அங்கிருந்த காவல்துறையினரையும், காரை சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் என்பவரையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வர கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறிவிட்டு, காவல் நிலையத்திற்கு சென்றார்.
சிறிது நேரத்தில் லாரி மட்டும் காவல் நிலையத்திற்கு வந்தது. ஆனால் கார் வரவில்லை. மாறாக காரை ஓட்டி வரச்சொன்ன சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் மட்டும் காவல் நிலையம் வந்தார். இதில் அதிர்ச்சியடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காரை பற்றி விசாரித்தபோது, ‘கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்பதால், உரிமையாரை எடுத்து வரச்சொல்லி விட்டு வந்து விட்டதாக’ சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் கூறியதாக தெரிகிறது.
இதனால், சந்தேகம் அடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இது குறித்து விசாரணை நடத்தினார். அப்போது மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார் மற்றும் அதன் உரிமையாளரை சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் தப்பவிட்டதும், அதற்கு ஏட்டு கோவிந்தராஜன் என்பவரும் உடந்தையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதையடுத்து மணல் கடத்தல் விவகாரத்தில் லாரிக்கு பாதுகாப்பாக வந்த காரை தப்பவிட்ட புகாரில் மோகனூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் கோவிந்தராஜன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா ஐபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் பேரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.