தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே காவல்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோரை சந்தித்து தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை எனவும்,பணியில் இருக்கும் காவலர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும்,ஓய்வு பெற்ற காவலர்கள் நீதிமன்ற அலுவல் பணிக்கு செல்லும் போது அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் என்பவர் இரவு ரோந்து பணியின் போது,வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில்,இதே போல் நாள்தோறும் பல்வேறு இடங்களில் தமிழகத்தில் காவலர்களுக்கு
பாதுகாப்பு இல்லாமல் பலவிதமான இன்னல்கள் அதிகரித்து வருவதாகவும்,அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி காவலர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும்,இந்த வருடத்தில் மட்டும் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம், மதுரை மாவட்டம் நாகலாபுரம், சென்னை,சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்,மதுரை மாவட்டம் உசிலம்பட்டி,ஆயுதப்படை காவலர் ஒருவர் கொலை என தமிழகத்தில் மட்டும் பல்வேறு சூழ்நிலைகளில் 6 காவலர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் நாள்தோறும் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் பலவிதமான இன்னல்களுக்கு காவல்துறையினர் ஆளாகி வருவதால்,தற்போது பணியில் இருக்கும் காவலர்களுக்கும்,ஓய்வு பெற்ற காவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,என்றும் அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோரை சந்தித்து இந்த கோரிக்கை மனுவினை அளித்த நிலையில்,தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதல்வருக்கு உடனடியாக தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெறும் என்றும் அவர்கள் அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற காவலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனு மிகவும் நியாயமானது, அத்தியாவசியமானது.இந்த கோரிக்கைகளை ராணுவ நடவடிக்கையாக அரசு முன்னெடுத்து காவலர்களுக்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுத்து காவலர்களுக்கான தனி சங்கத்தை நியமனம் செய்ய அரசு ஆணையிட்டு உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாகும்.