“தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் – நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 2025′ என்ற சட்டத்தின் அடிப்படையில் கந்து வட்டி கொடுமையால் மக்கள் அவதிப்படுவதைத் தடுப்பது மற்றும் கடனை வசூலிக்க மோசமான வழிகளைக் கடைபிடிப்பவர்களைக் தண்டிப்பது இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.
இந்த புதிய சட்டத்தின் கீழ், கடனை வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம்,அஞ்சு கிராமம் காவல் நிலையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சு கிராமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மருங்கூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மருங்கூர் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரது மனைவி மீது அதிகமான வட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கந்து வட்டி தொடர்பான புகார்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாகவோ அல்லது 8122223319 என்ற எண்ணிற்க்கோ தகவல் அளிக்கலாம். அதன் பிறகு தீவிர விசாரணை செய்து உண்மை நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ். அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.