கோயில் மணிகள் திருடிய வழக்கில் தவெக நிர்வாகி கைது !?
திருப்பத்தூர் அருகே மதுபோதையில் கோயில் மணிகள் திருடிய வழக்கில் தமிழக வெற்றிக் கழக கிளை நிர்வாகி கைது..
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாப்பாத்தி அம்மன் கோயிலில் தொடர்ந்து பித்தளை மணிகள் காணாமல் குறைந்து வருவதை கவனித்த பூசாரி மற்றும் பொதுமக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மர்ம நபர் ஒருவன் ஸ்கூட்டரில் வந்து, கட்டிங் பிளேடு மற்றும் சுத்தியுடன் கோயில் அருகே சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் அவனை பிடித்து குசிலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவன் ஏ.எஸ்.குமார் (வயது 48) என்பதும், அவன்
தமிழக வெற்றி கழக ஆண்டியப்பனூர் ஊராட்சி கிளைக்கழக பொறுப்பில் இருப்பதும், அவன் மது போதையில் இருப்பதும் தெரிய வந்தது.
மேலும், அவனிடம் இருந்த கட்டிங் பிளேடு, சுத்தி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணையில் கோயில் மணிகளை எடுத்துச் சென்று விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து குசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோயில் மணி திருட்டு சம்பவத்தில் அரசியல் கட்சி நிர்வாகி சிக்கியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.