வேண்டுதல்களை நிறைவேற்றி அருளும் சிவன்மலை சிங்காரவேலன் ஆலயத்தின் அற்புதம் அறிவோம்!!???
அருள்மிகு வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
சிவன்மலை,காங்கேயம் தாலுகா,
திருப்பூர் மாவட்டம்.
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும்.
மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும்.
பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி.
மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.

பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.
அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.
சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும்.
மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது.
சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார்.
அதன்படி, சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு, உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.
இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
விரும்பிய வரத்தை வேண்டிய படியே தந்து அருளும் சிவன்மலை முருகனை நாமும் தரிசித்து வாழ்வாங்கு வாழ்வோமாக!
வாழ்க பாரதம்! வளர்க இந்து மதம்!!