தைப்பொங்கல் அன்று சூரிய பகவானை வழிபட்டால் செல்வம் கொழிக்குமா??

by ஆசிரியர்
Reading Mode

தைப்பொங்கல் அன்று சூரியனை வழிபட்டால் செல்வம் கொழிக்குமா? ‘சௌரம்’ சொல்லும் ரகசியம் என்ன !?

உழவுத் தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது சூரிய பகவான். சூரிய வெப்பமே ஆவியாகிக் குளிர்ந்து, கருமேகமாக மாறி மழை பொழியக் காரணமாகிறது என்பதாலேயே பொங்கல் நன்னாளில் சூரியனை வழிபடுவது தொன்று தொட்ட மரபாக இருந்து வருகிறது. உலகில் சூரியனைக் காட்டிலும் ஒளி வடிவம் வேறொன்றும் இல்லை. சிவபெருமானை நோக்கி தவம் செய்து கிரகப் பதவியையும், ஒளி மண்டலத்தில் ஆயிரம் கிரகணங்களோடு விளங்கும் பேற்றையும் அடைந்தவர் சூரிய பகவான். இந்த ஆயிரம் கிரகணங்களில் 400 கிரகணங்கள் மழை பெய்வதற்கும்,300 கிரகணங்கள் மழை வளம் உண்டாவதற்கும், 300 கிரகணங்கள் பனி செய்வதற்கும் பயன்படுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

நவகிரகங்களில் சூரியனே நவகிரக நாயகனாகப் போற்றப்படுகிறார். மும்மூர்த்திகளின் பிரதிநிதியாக கண்கண்ட தெய்வமாக இருப்பவர் சூரியனே. வேத மந்திரங்களில் காயத்ரி மந்திரத்திற்கு உரியவர் சூரியன். சூரிய நமஸ்கரம் எனும் இவருடைய வழிபாடு மிகவும் சிறப்புடையது.

ஸ்ரீராமபிரானுக்கும் ராவணனுக்கும் யுத்தம் நடந்தபோது. ராமன் விட்ட ராம பாணத்தால் ராவணனின் பத்து தலைகள் அறுபட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த அகத்தியர், ஆதித்ய ஸ்ருதி ஸ்தோத்திரம் எனும் சூரிய மந்திரம் உனக்கு தெரிந்தால் மட்டுமே ராவணனை அழிக்க முடியும் என்று அந்த மந்திரத்தை ஸ்ரீராமருக்கு சொல்லிக் கொடுத்தார். அதன் பின்னரே ராவணனை ஸ்ரீராமனால் வெல்ல முடிந்தது.

வேதங்களில் பல இடங்களில் சூரிய தேவனின் புகழ் பாடப்படுகிறது. மூவகை நெருப்புகளில் ஒன்றாக சூரியனை ரிக் வேதம் புகழ்கிறது. மிகப் பழைமையான தமிழ் நூலான தொல்காப்பியத்தில் சூரிய மண்டலம், ‘வெஞ்சுடர் மண்டலம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் சூரியன் கோயில் ‘உச்சிக்கிழான் கோட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராமர் பிறந்த ரகுவம்சம் சூரியனை முதன்மையானவராகக் கொண்டது. அனுமன் சூரிய பகவானிடம்தான் புனித நூல்களை கற்றறிந்தார் என்கிறது ராமாயணம். பாரதியார் தனது தெய்வப் பாடல்கள் வரிசையில் சூரியனை முதன்மைப்படுத்தி பாடியுள்ளார். சூரியனுக்கு பரிதி, ஞாயிறு, பகலவன், கதிரவன், தினகரன், ஆதித்தன், ரவி என்று பல்வேறு பெயர்கள் உள்ளன.

சூரிய நமஸ்காரம் செய்வதால் கண்ணொளி பொலிவு பெறும் என்கிறது ஆயுர்வேதம். ‘மயூர கவி’ எனும் வடமொழிப் புலவர் ‘சூரிய சதகம்’ பாடி கண்ணொளி பெற்றார் என்பது வரலாறு.

ரிக் வேதத்திலேயே சூரிய வழிபாடு பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆணுக்கு வேண்டிய வீரம், பராக்கிரமம், ஆண்மையை தருபவர், பெண்ணுக்கு கற்பு நெறியை அருள்பவர் இவரே. இவர் சிம்ம ராசியில் ஆட்சி பெறுகிறார். சித்திரை மாதத்தில் உச்சம் பெறுகிறார். இவருக்கு உரிய நட்சத்திரங்கள் கார்த்திகை,உத்திரம் உத்திராடம். சாம வேதம் ‘சூரிய தேவனிடம் தீவினைகள் தீர வேண்டிக்கொள்’ என்கிறது.

சூரியனை பொங்கல் திருநாள் மற்றும் ரத சப்தமி நாளில் மட்டுமல்லாமல், ஆவணி ஞாயிறு, ஆடி மாதம் கடைசி செவ்வாய், கார்த்திகை சோமவாரம்,தை மாத அஷ்டமி திதி, மாசி மாத மகாசிவராத்திரி ஆகிய நாட்களிலும் வழிபடலாம். சூரியனை வழிபடும் மார்க்கத்தை இந்து மதத்தில் ‘செளரம்’ என்பர். ஆதித்தன் எனும் சூரிய பகவானை தைத்திருநாள் அன்று பூஜிப்பதால் பண வரவும், தான்ய லாபமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00