சிறு குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2700 வழக்குகளுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழக முழுவதும் நீதி பரிகாரம் தேடியும், நிவாரணம் கேட்டும் லட்சக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியலை ஆய்வு செய்தது. 3 ஆண்டுகளுக்கும் குறைவாக சிறை தண்டனை வழங்கக்கூடிய வகையில் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காக நிலுவையில் இருக்கும் வழக்குகளே பல்லாயிரக்கணக்கில் இருப்பது தெரிந்தது.
இவற்றை விரைந்து முடிக்கும் பொருட்டு உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து 3 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை, அபராதம் விதிக்கத்தக்க வகையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்து உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டது
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நீண்டநாள் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்குகள் இனம் காணப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2700 வழக்குகளுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.