விநாயகர் சிலைகளை கரைப்பதில் மத்திய, மாநில அரசு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழி காட்டுதல்கள், விதிமுறைகள், உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு .
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து கொண்டாட அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புகழேந்தி சிலம்பு சில மனுக்களை அனுமதித்தும் சில மனுக்களை அதிகாரிகளின் பரிசீலனைக்கும், சில மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.இதில் மத்திய, மாநில மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள், உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
மனிதர்கள் மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சிலைகள் கரைக்கப்படுவது அவசியம். ரசாயன வண்ண பூச்சுகள் அல்லது பிற மக்காத பொருட்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் சிலைகளில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை விழா ஏற்பாட்டாளர்கள் அதிகாரிகளிடமிருந்து பெற்று இருக்க வேண்டும்.
இந்த சான்று வழங்கப்பட்ட சிலைகள் மட்டுமே நீர் நிலைகளில் கரைக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.