விநாயகர் சதுர்த்தி.. விநாயகருக்கு சுவையான கொழுக்கட்டை இப்படி செய்யுங்கள்..!!விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்?
விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில் ஒரு உண்மை உள்ளது.
மோதும் அகங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்திதான் கொழுக்கட்டை என்னும் மோதகத்தை படைக்கின்றோம்.
மேல் தோலாக இருக்கும் மாவு பொருள் அண்டம். அதன் உள்ளே இருக்கும் பூரணம், பிரம்மம். நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது மாயை. இந்த மாயை-யை அகற்றிவிட்டால், பூரணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும். இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்.
கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
கொழுக்கட்டை தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – 1 கப்
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
வெல்லம் – 1/2 கப் (உங்கள் சுவைக்கேற்ப)
ஏலக்காய் தூள் – சிறிதளவு
பூரணம் செய்ய:
முதலில் அடுப்பில் பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரையும் வரை கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும், அதை வடிகட்டி கழுவி, மீண்டும் அடுப்பில் வைக்கவும்.வெல்லம் நன்றாக உருகி, ஒரு மெல்லிய பதத்திற்கு வந்ததும், அதில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.குறைந்த தீயில் நன்றாக கிளறி, எல்லா பொருட்களும் ஒன்றாக கலந்து உலர்ந்த பூரணமாக வரும்படி செய்யவும். இப்பொழுது கொழுக்கட்டைக்கு தேவையான பூரணம் தயார்.
கொழுக்கட்டை செய்ய:
முதலில் அரிசி மாவில் உப்பினை கலந்து கொள்ளவும். பின் தண்ணீரை கொதிக்க வைத்து அரிசி மாவில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டவும்.
பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்து அதில் சிறிதளவு பூரணக்கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும்.
திரட்டும்போது பூரணக்கலவை வெளியே வந்து விடாமல் பார்த்து கொள்ளவும். எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக செய்தபின் இட்லி பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
விநாயகருக்கு பிடித்த சுவையான கொழுக்கட்டை தயார்.
பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – 1 கப்
பால் – 2 கப்
தேங்காய் பால் – 1 கப் (விரும்பினால்)
சர்க்கரை – சுவைக்கேற்ப
ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை:
கொழுக்கட்டை செய்ய:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை கொட்டுங்கள். அதில் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரிசி மாவை சேர்த்து, கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.மாவு சூடாக இருக்கும்போதே சிறிய சிறிய உருண்டைகளாக (கொழுக்கட்டை) செய்து கொள்ளுங்கள்.
பால் கலவை செய்ய:
ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை (2 கப்) கொதிக்க வைக்கவும். சர்க்கரை தேவையான அளவு சேர்த்து கொள்ளவும். பால் நன்றாக கொதித்து வந்ததும் கொழுக்கட்டை உருண்டைகளை பாலில் போட்டு நன்றாக வேகவிடவும். பிறகு ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் மாவை தண்ணீரில் கரைத்து அதிலே ஊற்றவும். இப்போது கெட்டி பதத்திற்கு வர தொடங்கிவிடும்.
சுவைக்காக தேங்காய் பால் சேர்க்கலாம். கொழுக்கட்டைகள் வெந்ததும், ஏலக்காய் தூளை சேர்த்து கலக்கவும். விநாயகருக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை தயார்.பால் கொழுக்கட்டை சூடாகவே பரிமாறலாம் அல்லது குளிரவைத்து பரிமாறலாம். விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டையை படைத்து விநாயகரின் அருளைப் பெறுவோம்.