ஆஞ்சநேயர் ஆலயங்களில் அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதுண்டு.இந்த நாளில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு,வடை மாலை சாற்றப்பட்டு வழிபடப்படுகிறது. குறிப்பாக கிரக தோஷங்களை நீக்கும் நாள் என்றும்,முன்னோர்களை வழிபடும் நாள் என்றும் நம்பப்படுவதால் அமாவாசை அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பானது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா,ஆவணிப்பட்டி கிராமத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பக்த ஜெயம் கொண்ட ஆஞ்சநேயர்,ஸ்ரீ ஆதியந்த பிரபு ஆலயத்தில்,பகவான் ஆஞ்சநேயருக்கு பால், தயிர்,நெய்,பன்னீர்,இளநீர், சந்தனம்,விபூதி போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அபிஷேகத்திற்குப் பிறகு ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரமும், வடை மாலை சாற்றியும் மிகச் சிறப்பான முறையில் வழிபாடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. பூஜைகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அன்னதானமாக பிரசாதம் வழங்கப்பட்டது.

கிரக தோஷ நிவர்த்தி:
குறிப்பாக அமாவாசை என்பது கிரக தோஷங்கள் நீங்கும் நாள் என்றும், வாயு பகவானுக்குரிய நாள் என்றும் நம்பப்படுகிறது.ஆஞ்சநேயர் வாயு புத்திரன் என்பதால்,அமாவாசை அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது வாயு பகவானை வழிபடுவதாக கருதப்படுகிறது.
முன்னோர் வழிபாடு:
அமாவாசை திதி என்பது முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், தர்ப்பணம் செய்யவும் உகந்த நாள் என்பதால், இந்த நாட்களில் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
பிரபலமான ஆலயங்களில் ஒன்றான ஆவணிப்பட்டி ஸ்ரீ பக்த ஜெயம் கொண்ட ஆஞ்சநேயர் ஆலயம் வேண்டுதலை வேண்டியபடியே கொடுக்கும் சிறப்புமிக்க ஆலயமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தின் அமாவாசை அன்றும் சிறப்பு அபிஷேகங்களும்,பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

அதுபோல் ஆவணி மாதம் ஆறாம் நாள் (22/08/2025) வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ அமாவாசை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.அதன் பிறகு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அற்புத சுவை மிக்க புளியோதரை,சர்க்கரைப் பொங்கல் மற்றும் பகவான் ஆஞ்சநேயருக்கு நெய்வேத்தியமாக படைக்கப்பட்ட வடையும் பிரசாதமாக வழங்கப்பட்டது.வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அன்னதானம் உண்டு,ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருள் கண்டு,பக்தி பரவசத்தில் பேரானந்தம் கொண்டு மகிழ்ந்தனர்.