தமிழ் வருஷத்தின் படி, ஆடி ஆண்டின் நான்காவது மாதம். ஆடிப் பண்டிகை அல்லது ஆடிப் பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது, இது பெரும்பாலான தமிழர்களுக்கு, குறிப்பாக புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு முக்கியமான பண்டிகையாகும்.
நல்ல மணவாளன் அமைய இந்த நாளை மறந்துடாதீங்க..!!
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியை பெண்ணாக வணங்கும் நாள்! ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக்கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாக கருதி, பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கள காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.
அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு, அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து, அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.
ஆற்றங்கரைக்குப் போகும் பொழுதே, ஒரு முறத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்ய சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து, மற்றொரு முறத்தில் மூடி எடுத்துச் செல்வர். ஆற்றங்கரையில் இவற்றை வைத்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்குவர்.
இந்த நன்னாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும் சொல்லலாம். காதோலை கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும் கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை.
தானிய அபிவிருத்தி (பயிர்கள் செழிக்க) அருளும் அம்பிகையை, பெண்கள் வம்ச அபிவிருத்தி (நற்குழந்தைப் பேறு) வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள்.

ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. மேலும், புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு பெருக அருள்புரியும். பூஜையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
வீட்டில் பூஜை செய்வது எப்படி?
வீட்டில் பூஜை செய்ய ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.
ஒரு தாம்பாலத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்யச் சரடு என்று பெண்கள் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைக்க வேண்டும்.
பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், சூரிய பகவானையும் வணங்க வேண்டும்.
வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.
திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படிச் செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
புனித நதிக்கரைகளுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் ஒரு சொம்பில் தூய்மையான தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் போட்டு நிவேதனம் வைத்து, ஏழு புனித நதிகளின் பெயரை கூறி வணங்கினால் போதுமானது.
அதோடு இந்த நாளில் மகாலட்சுமி மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாக ஐதீகம். ஆகையால் குபேரனையும், மஹாலட்சுமியையும் இந்த நன்னாளில் வணங்குவதால் குறைவற்ற செல்வம் வீட்டில் நிலைக்கும்.
அறிவியலும், முன்னோர்களின் வைத்தியமும் :
அறிவியல் ரீதியாக பார்ப்போமானால் மஞ்சள் என்பது கிருமிநாசினி ஆகும். மஞ்சள் தடவிய கயிற்றை ஆடிப்பெருக்கு அன்று மாற்றிக் கொள்வதன் மூலம் கிரகங்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மற்றும் கிருமிநாசினியாக செயல்படும் மஞ்சள், பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான ஆரோக்கியம் சார்ந்த இன்னல்களில் இருந்து காக்கும் வண்ணமாக அமைந்துள்ளது.
மேலும், அன்றைய தினத்தில் உறவினர்களுடன் கூடியிருக்கும் சூழலில் அவர்களின் மனமும் மகிழ்ச்சியான சூழலில் இருப்பதினால் கிருமிநாசினியும், அவர்களுடன் இணைந்து அவர்களை பாதுகாக்கும் அரணாக செயல்பட துவங்குகின்றது. இதுவே ஆடிப்பெருக்கு அன்று மாங்கல்ய கயிறு மாற்றுவதன் ரகசியம் ஆகும். ஆகவே சுமங்கலி மற்றும் கன்னி பெண்கள் யாவரும் இந்நாளை தவறவிட வேண்டாம். ஏனெனில் சமயமும், ஆரோக்கியமும் சார்ந்து நமது முன்னோர்கள் சொன்ன வைத்திய முறை இதுவாகும்.
நாமும் இந்த ஆடிப்பெருக்கென்று மேற்குறிப்பிட்டது போல் காவிரி அன்னையை வழிபாடு செய்து வாழ்வில் அனைத்து நலமும் பெற்று வளமோடு வாழ்வோமாக!