பத்தாண்டு காதல்! காதலிக்கு பத்து நாட்களில் வந்த மாற்றம்! காதலனுக்கு ஏமாற்றம்! துக்கத்தால் காதலன் மரணம்!!!??

by ஆசிரியர்
Reading Mode

10 வருட காதல், வெறும் பத்து நாட்களில் எஸ்ஐ மீது வந்த மோகம், காதலி ஏமாற்றியதால் காதலனுக்கு சோகம்! அதனால் அவர் மரணம்!!??

மயிலாடுதுறை அருகே பத்தாண்டுகளாக காதலித்த பெண்ணுக்கு திடீரென காவல் உதவி ஆய்வாளர் மீது காதல் வந்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

திருமணம் குறித்து பேச்சு வார்த்தை வரை சென்ற நிலையில், பத்தாண்டுகளாக காதலித்த பெண் ஏமாற்றியதால், இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது29). இவர் குவைத் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்தார். வெளிநாடு செல்வதற்கு முன்னர் சீர்காழி தாலுக்கா திருப்பங்கூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவரை சரத்குமார் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சங்கீதா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது இருச்சக்கர வாகனம் காணாமல் போனதாக வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அங்கு பணியாற்றிய எஸ்‌ஐ சூரியமூர்த்தி வழக்கை விசாரிக்கும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குவைத்தில் உள்ள சரத்குமார்,காதலி சங்கீதா எஸ்.ஐ சூர்யமூர்த்தியை காதலிப்பதால் தன்னை நிராகரிப்பதாகவும், தனக்கு வாழ பிடிக்கவில்லை” என்று பெற்றோருக்கு ஆடியோ மெசெஜ் அனுப்பிவிட்டு நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என 100 க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட காவல்    கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது சரத்குமாரின் தாய் சங்கீதா அளித்த புகார் மனுவில், தனது மகன் சரத்குமார் வெளிநாடு செல்வதற்கு முன்பிலிருந்து 10 வருடங்களாக சங்கீதாவை காதலித்து வந்தார். எங்கள் மகன் அந்த பெண்ணிற்கு 15 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணமும் அனுப்பியுள்ளார். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவீட்டாரும் பேசினோம். இந்நிலையில், அந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தியை காதலிப்பதாகவும், தனது    மகனை    திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் அனுப்பிய பணம் மற்றும் நகையை எனது மகன் திருப்பி கேட்ட போது, எஸ்.ஐ சூர்யமூர்த்தி, காதலி சங்கீதா, காதலியின் தாயார் ஜெயந்தி ஆகியோர் வீடியோ காலில் தொடர்புகொண்டு, பணத்தை திருப்பி தரமுடியாது என்றும்,என் மகளை அரசாங்க வேலையில் உள்ள மாப்பிள்ளைக்கு தான் தருவேன், உனக்கு தர முடியாது என ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

மேலும், எஸ்.ஐ சூர்யமூர்த்தி, என் மகன் மீது பொய் வழக்கு போடுவேன் என்றும், ஏர்போர்ட்டில் வைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். எனவே, சங்கீதா, அவரது தாய் ஜெயந்தி, எஸ்.ஐ சூர்யமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சரத்குமாரின் தாய் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்ட தங்கள் மகன் சரத்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சரத்குமாரின் தாய் கண்ணீருடன் மனு அளித்தார்.

இந்த நிலையில், மனுவை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், காதலித்து ஏமாற்றிய சங்கீதாவுக்கு ஆதரவாக மிரட்டல் விடுத்த காவல் உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தியை ஆயுதப்படைக்கு இடமாற்றம்        செய்தார். பத்தாண்டுகளாக காதலித்த பெண் ஏமாற்றியதால், வெளிநாட்டில் இருந்தபடி இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பத்தாண்டுகளாக ஒருவரை காதலித்து அவரிடம் இருந்து பணமும் நகைகளையும் பெற்று, பத்து நாட்களில் பதவியில் இருக்கும் அரசு அதிகாரியை காதலித்து பத்தாண்டு காதலை 10 நாட்களில் தூக்கி எறிந்து விட்டு மற்றொருவரை திருமணம் செய்ய துணிகிறார்கள். என்றால், இதற்குப் பெயர் காதல் இல்லை. பணத்தாசை!! இவர்களைப் போன்றோர் செய்யும் துரோகத்தால் சரத்குமாரின் குடும்பம் தன் வம்சத்தையே இழந்து நிற்கிறது. இந்த தரம் கெட்ட குற்றத்தை செய்த அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00