அறநிலையத்துறை இணை கமிஷனர் கைது ! ஆலயத் திருப்பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் !!?
அம்மாபேட்டை தீபாம்பாள்புரம் வள்ளியம்மைநாதர் கோயில் புதுப்பிக்கும் பணிக்கான ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பழகன் தலைமையில் தீவிர விசாரணை
கோவில் திருப்பணி செய்யும்,ஒப்பந்ததாரரிடம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கிய, தஞ்சாவூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் மற்றும் அவருக்கு புரோக்கராக செயல்பட்ட அவரது தோழி இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், தீபாம்பாள்புரம் பகுதியில், மங்களாம்பிகை சமேத வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக திருப்பணியை நாகையை சேர்ந்த ஒப்பந்தக்காரர் மதியழகன் செய்து வருகிறார்.
இந்நிலையில், திருப்பணி பணிக்கான பணத்தை தர, ஒப்பந்ததாரர் மதியழகனிடம், தஞ்சை மண்டல ஹிந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அந்தப் பணத்தை அவரது புரோக்கராக செயல்படும் கிரிஜா வாயிலாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மதியழகன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் கொடுத்த அறிவுரையின் படி மதியழகன் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை, அறநிலையத்துறை அலுவலகத்தில் ஜோதிலட்சுமி, கிரிஜா ஆகியோரிடம் லஞ்சமாக கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை, டிஎஸ்பி அன்பரசன் தலைமையிலான போலீசார், இருவரையும் கைது செய்தனர். மேலும், ஹிந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர். கிரிஜா என்பவர், இணை கமிஷனரின் தோழி. அவருக்கு புரோக்கராக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.