புதுச்சேரியின் வளர்ந்து வரும் நகரமான வில்லியனூரில் புகழ்பெற்ற பெரிய கோவில் என அழைக்கப்படும் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. தர்மபால சோழ மன்னரால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். தென்னக சிவாலயங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் உள்ள தேர் மிகவும் பழமையானதால், வல்லுநர் குழு ஆய்வு செய்து புதிய தேர் செய்வதற்கான ஒப்புதல் வழங்கினர். இதையடுத்து முதல்வர் ரங்கசாமி வழிகாட்டுதல்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்களின் சீரிய முயற்சியால் கோவில் நிர்வாகம், தேர் கமிட்டி, ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் வல்லுநர் குழு உதவியுடன் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் புதிய தேர் அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிய தேர் செய்வதற்கு ஸ்தபதியை தேர்வு செய்வதற்கான டெண்டர் விடுவது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தலைமையில்,கோவில் நிர்வாகம், தேர் கமிட்டி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, புதிய தேர் செய்வதற்கான ஸ்தபதியை தேர்வு செய்ய டெண்டர் விடுவதற்கு அனுமதி அளித்த முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள், தேர் செய்வதற்கான நிதியை விரைவில் அளிப்பதாக உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவிப் பொறியாளர் செல்வராஜ், பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பிரபு, தினகர், வனத்துறை இணை இயக்குநர் ராஜ்குமார், கோவில் சிறப்பு அதிகாரி திருக்காமீஸ்வரன், திமுக மூத்த முன்னோடி லட்சுமணன் என்கிற மண்ணாங்கட்டி, வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், நிர்வாகிகள் சபரிநாதன், மிலிட்டரி முருகன், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.