திருநெல்வேலி தாமிரசபையில் சிவபெருமானின் திருநடனம் கண்டால் என்ன பலன்
கிடைக்கும் தெரியுமா?
மலையாள நாட்டில் அன்னதி என்ற நகரத்தில் தொண்டி என்ற பெயர் கொண்டவன் வாழ்ந்து வந்தான்.
அவன் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளிலும் நீராடவில்லை.
களவு, கொலை, கொள்ளை போன்ற கொடும் பாவங்களை செய்து காலம் கழித்து வந்தான்.
இதனால் அவனை பிரம்மஹத்தி என்ற தோஷம் பிடித்துக்கொண்டு அவனை விரட்டிக்கொண்டே வந்தது.
அவன் ஒரு சமயம் திருநெல்வேலிக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நகர் காற்று பட்டவுடன் அவனுக்கு சிந்தை தெளிவு அடைந்தது. தெளிவு பெற்ற தொண்டி சிந்துபூந்துறையில் நீராடி, நெல்லையப்பர் கோயிலுக்குள் புகுந்து மூலமகாலிங்கத்தையும், வேணுவன நாதரையும் வணங்கி, “வடிவாளை துதித்துப் போற்றி திருவாதிரை தினத்தில் தாமிரசபையில் நெல்லை நாதனின் திரு நடனமும் கண்டான்.
பின் நகரத்தை விட்டு வெளியேறி வரும் போது அவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாலும், பசியின் காரணமாகவும் படுத்து தூங்கிவிட்டான்.
அப்போது நாகன் என்ற கொடும்பாவி, தொண்டியிடம் வந்து, இவன் கையில் பொருள் ஏதும் உள்ளதா என பரிசோதித்து, பொருள் இல்லாமையால் தொண்டியை அடித்தான்.
பிறகு இருவரும் நட்பாயினர். இருவரும் முன் போல வழிப்பறி பண்ணி வாழ்ந்தனர்.
இருவரின் தொல்லை பொறுக்க முடியாத அரசன் இருவரையும் கொன்றான்.
அப்போது எமதூதர்கள் இருவரும் செய்த பாவங்களுக்காக தண்டித்தனர்.
உடனே குறுக்கிட்ட சிவகணங்கள் அவ்விருவரையும் விமானத்தில் ஏற்றி சிவபெருமான் வாழும் கைலாயத்தில் சேர்த்தனர்.
தொண்டி தாமிரசபையில் திரு நடனம் கண்டதால் பாவம் நீங்கப்பெற்றான்.
தாமிரசபையில் தரிசனம் கண்ட தொண்டியை நாகன் கண்டதால் அவனது பாவம் நீங்கப்பெற்றான்.
எனவே திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் உள்ள தாமிரசபையில் (03-01-2026) திருவாதிரை அன்று நடைபெறும் திரு நடனம் காண்பவர்களுக்கும்,
திரு நடனம் கண்டவர்களை காண்பவர்களுக்கும் முக்தி உண்டு என்று திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது.
(03-01-2026) அன்று திருநெல்வேலிக்கு சென்று கூத்தபிரானின் இந்த ஆனந்த நடனக்காட்சியை காணுங்கள்,எளிதாக
முக்தியை அடையுங்கள்.