12/08/2025 செவ்வாய்க்கிழமை மஹா சங்கடஹர சதுர்த்தி விழா.
மஹா சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால், ஒரு வருடம் விரதம் இருந்ததற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். விநாயகரை வழிபடுவதற்கு சிறப்பு வாய்ந்த இந்த நாளில், சங்கடங்கள் தீர பிராத்தனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சங்கடங்களை நிவர்த்தி செய்யும், இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் தான் விநாயகர் சந்திரனுடைய ஆணவத்தை அழித்து, அருள் புரிந்தார்.
நம் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை நீக்கி, நம் ஆணவம், கன்மம், மாயை அனைத்தையும் அகற்றி, தெய்வீக சிந்தனை உடன், செழிப்பான வாழ்க்கையை கொடுக்கக்கூடிய இந்த மஹா சங்கடஹர சதுர்த்தி தினத்தில் எப்படி விநாயகப் பெருமானை வழிபட்டு, சந்திரனை தரிசனம் செய்வது? என்னும் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறையை பற்றிப் பார்ப்போம்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு பிறகு நான்காவது திதியில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியை “சங்கடஹர சதுர்த்தி” என்று கூறுவார்கள். ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி வருவதற்கு முன்பு வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியை தான் மஹா சங்கடஹர சதுர்த்தி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் விநாயகரை வழிபட்டு, சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களும், தடைகளும் விலகும் என்பது பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
விநாயகருக்கு புதிதாக விரதம் மேற்கொள்ள விரும்புபவர்கள், மஹா சங்கடஹர சதுர்த்தி நாளிலிருந்து துவங்குவதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரை கடைபிடிக்காதவர்களும் மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் இனி தொடர்ந்து விரதமிருந்து வழிபட்டு வந்தால், அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையிலேயே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
உணவு எதுவும் உண்ணாமல் முழு நேர உபவாசம் இருப்பது அவசியம் ஆகும். அப்படி உடல்நிலை காரணமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் எளிய பால், பழங்கள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
நம் உடலை வருத்திக் கொண்டு எந்தவிதமான விரதத்தையும் மேற்கொள்ள சாஸ்திரங்கள் வற்புறுத்துவதில்லை. விநாயகரை அலங்காரம் செய்து அருகம்புல் மாலை சாற்றிக் கொள்ளுங்கள். விநாயகருக்கு மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், அவல், பாயசம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து படைக்கலாம்.
எருக்கம் பூ கொண்டு மாலை கோர்த்து விநாயகருக்கு சாற்றலாம். முதலில் மஞ்சளை பிள்ளையார் பிடித்து வைத்து, பூஜையை துவங்க வேண்டும். காலையிலேயே வீட்டில் பூஜை செய்துவிட்டு, விநாயகர் மந்திரங்கள், விநாயகர் ஸ்தோத்திரங்கள், விநாயகர் அகவல், விநாயகர் புராணங்கள் போன்றவற்றை படிக்கலாம். இந்த நாளில் விநாயகர் பாடல்கள் கேட்பதும், மனதில் “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதும் ரொம்பவே நல்லது.
சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று மாலையில் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று, அங்கு நடக்கும் பூஜை விசேஷங்களில் கலந்து கொள்ளுங்கள். இரவு சந்திரன் வந்ததும் சந்திரனை தரிசனம் செய்ய வேண்டும். சந்திரன் தன் ஆணவத்தால் பொழிவிழந்து, மீண்டும் அருள் கிடைக்கப்பெற்ற நாள் என்பதால், சந்திரனை தரிசனம் செய்து பின்னர் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
நாமும் மஹா சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு நமது சகல சங்கடங்களும் நீங்கி வாழ்வில் வெற்றி அடைவோமாக.