ஆடி செவ்வாய் வழிபாடும்! அதனால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகளும்!

by ஆசிரியர்
Reading Mode

ஆடிச் செவ்வாயில், அம்மனை பெண்கள் கீழ் உள்ளவாறு வழிபட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், என்பதை அறிந்து வழிபடுங்கள்.

01) பெண்கள் பச்சை மஞ்சளை அரைத்து குளிப்பதால்

02) அவ்வையார் நோன்பு இருப்பதால்

03) அம்மனுக்கு முளைப்பாரி எடுப்பதால்

04) அன்னதானம் செய்வதால்

05) மகாலட்சுமியை வழிபடுவதால்

06) அம்மனை ராகு காலத்தில் வழிபடுவதால்

07) குத்துவிளக்கேற்றி ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால்

அளப்பரிய அற்புதமான நன்மைகளை அடையலாம்  என்பது திண்ணம்.

ஆடி செவ்வாய் தேடி குளி,அரைச்ச மஞ்சளை பூசிக் குளி. என்ற பழமொழிக்கு ஏற்ப ஆற்றங்கரைக்குச் சென்று பெண்கள் பச்சை மஞ்சளை அரைத்துத் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து கொள்வார்கள். பாதங்களில் நலுங்கு மஞ்சளை பூசிக்கொண்டு பிறகு ஆலயத்திற்குச் செல்வார்கள். அங்கு அம்மனுக்கு அர்ச்சனை, நிவேதனம் செய்து பிறகு வீட்டிற்குச் சென்றதும் மஞ்சள் பொங்கல் தாளகம் வைத்து சாப்பிடுவார்கள். துருவிய தேங்காய் வெல்லமும் கூட சேர்த்துக் செய்வார்கள். பலவித வடகம் பொரித்து சாப்பிடுவார்கள்.

தென் மாவட்டங்களில் ஆடி செவ்வாய்க்கு ஔவையார் நோன்பு கடைப்பிடிப்பார்கள். ஔவையார் நோன்பு கடைபிடிப்பதால் கன்னிப் பெண்களுக்கு திருமணமும், சுமங்கலிப் பெண்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும், குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பு இல்லாமல் செய்யும் கொழுக்கட்டைதான் நோன்பின் சிறப்புப் பிரதானமாகும். இதைப் பெண்கள் மட்டும்தான் செய்வார்கள்.

ஆடி மாதம் என்றாலே அம்பிகை வழிபாட்டுக்கு உரிய மாதம்தான். அதிலும் ஆடி செவ்வாய் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த கிழமையாகக் கருதப்படுகிறது. அம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுப்பார்கள். இதை, ‘முளைப்பாலிகை’ என்பார்கள். நெல்லின் நாற்று காற்றில் அசைவது போல முளைப்பாரியும் அலை அலையாக ஆடி அசையும் அழகே அழகாக இருக்கும். பெண்கள் இதை சுமந்து செல்லும்போது அம்மனின் அம்சமாகக் கருதி பரவசத்தில் வழிபடுவார்கள். வெறும் அலங்காரம் அழகிற்காக மட்டுமே சுமக்க மாட்டார்கள். முளைப்பாரி எப்படி செழித்து உயரமாக வளர்கிறதோ, அதுபோல குடும்பமும் தழைக்கும் என்பது நம்பிக்கை. கன்னிப் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தால் நல்ல மண வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ஆடி செவ்வாயன்று அன்னதானம் செய்தால் பிற நாட்களில் செய்ததை விட நாற்பத்தெட்டு மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இந்த தானத்தில் அனைத்து வித காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைத்த சாப்பாடு கொடுப்பது மிக மிக நல்லது.

தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள சூலினி துர்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமை மட்டுமே அதுவும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டும்தான் செய்ய முடியும்.

ஆடி மாதத்தில் அனைத்து தெய்வங்களின் சக்தியும் அம்பிகையுனுள் அடக்கம் என்பதால் மாரியம்மனை வழிபடுவது போல மகாலட்சுமியையும் இந்த நாளில் வழிபடுவதால் செல்வம் சேர்ந்து வீட்டில் கடன் பிரச்னைகள் அனைத்தும் தீரும்.

ஆடி செவ்வாய்க்கிழமையன்று ராகு கால நேரத்தில் துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவதால் இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும். துர்கை அம்மனை ராகு கால நேரத்தில் விளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதால் நமது பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேற்றி வைப்பாள் துர்கை அம்மன்.

ஆடி செவ்வாய்க் கிழமையன்று வீட்டின் வாசலில் கோலம் போட்டு பூஜையறையில் குத்துவிளக்கு ஏற்றி ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் அம்மன் பாடல்களையும் துதிகளையும் படிப்பதோடு, பால் பாயசம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவளித்து அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச்சிமிழ் சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். ஆடி செவ்வாயன்று அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து அம்மனிடம் நமது வேண்டுதல்களை சமர்ப்பிக்க அம்மன் அதனை நிறைவேற்றி தருவாள்.

எனவே நாமும் ஆடிச் செவ்வாயில் அம்மனை வழிபட்டால் அளப்பரிய நன்மைகளை ஆதிசக்தி அள்ளித் தருவாள் என்பது திண்ணம்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00